
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தத்து. 4 மணி நேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் தண்ணீர் தேங்கியது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலைகளில் தேங்கி உள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை இல்லாததால் மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னையின் பல இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவரின் பதிவில் “ சரியாக அலுவலகம் செல்லும் நேரத்தில் சென்னையில் மழை தொடங்கியது. முதலில் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி பின்னர் நகர் முழுவதும் மழை பரவலாக பெய்ய தொடங்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் மற்றொரு பதிவில் “ செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது 6,000 கன அடி நீர் என்ற அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியிலும் உபரி நீர் உள்ளது. நேற்று கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 2015-ம் நவம்பர் 23-ம் தேதியை நினைவுப்படுத்தியது. அன்றைய தினம் 100-150 மி.மீ மழை பெய்த போதும் இதே போன்ற நிலை ஏற்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலை தெற்கு அந்தமான பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களுக்கு மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.