தமிழகத்தில் லலிதா ஜூவல்லரி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 24 மணி நேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றால் புகார் அளிக்கக்கோரி அவசர எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் கிடைத்ததை அடுத்து ஒரே நேரத்தில் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடை, தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகம், லலிதா ஜூவல்லரி உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள லலிதா ஜூவல்லரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து எவ்வித ஆவணங்களும் சிக்காத நிலையில், தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.