
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் 45.1 ஓவர்களில் 235 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்க் செய்ய முடிவெடுத்தது. ஆடிய தமிழகத்தில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கெளஷிக் காந்தி 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 127 ஓட்டங்கள் விளாசினார். கேப்டன் விஜய் சங்கர் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 100 ஓட்டங்கள் அடித்தார்.
முரளி விஜய் 11 ஓட்டங்கள், பாபா அபராஜித் 16 ஓட்டங்கள், ஜெகதீசன் 27 ஓட்டங்கள் எடுக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
குஜராத் தரப்பில் சிந்தன் கஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 312 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய குஜராத்தில் பார்கவ் மெராய் அதிகபட்சமாக 101 ஓட்டங்கள் அடித்தார். கேப்டன் பிரியங்க் பஞ்சல் 42 ஓட்டங்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன.
தமிழக தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்கள் , ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.