
மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றான இந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லி நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 43.2 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.
டாஸ் வென்று பேட் செய்த இந்தியாவில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 84 ஓட்டங்கள் விளாசினார்.
கேப்டன் மிதாலி ராஜ் அரைசத வாய்ப்பை இழந்து 45 ஓட்டங்களில் வெளியேறினார். பூனம் ராவத் 19 ஓட்டங்கள் , ஹர்மன்பிரீத் கெளர் 16 ஓட்டங்கள் , சுஷ்மா வர்மா 15 ஓட்டங்கள் எடுத்தனர்.
வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர். இறுதியாக ஷிக்ஷா பாண்டே 9 ஓட்டங்கள் , ஜுலன் கோஸ்வாமி 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் மாரிஸானே காப் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய அந்த அணியில் கேப்டன் டேன் வான் நீகிர்க் மட்டும் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 125 ஓட்டங்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா.
இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி அதிகபட்சமாக 4 விக்கெட்கள், ஷிக்ஷா பாண்டே 3 விக்கெட்கள், பூனம் யாதவ் 2 விக்கெட்கள், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை அளித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.