ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் ரூபன் பெமல்மன்ஸுடன் மோதுகிறார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற இருக்கிறது. இதில், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற ஃபெடரர் பங்கேற்கிறார்.
அவர் தற்போது உலகின் 2-ஆம் நிலை வீரராக உள்ளார். இந்தப் போட்டியில் ஃபெடரர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாலே, நடாலை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம்.
இதன்மூலம், ஏடிபி வரலாற்றில் தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான நபர் (36) என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதுவரை, அமெரிக்காவின் ஆன்ட்ரே அகசி 2003-ஆம் ஆண்டு தனது 33-ஆவது வயதில் உலகின் முதல்நிலை வீரராக வந்ததே அதிகபட்சமாக உள்ளது.
கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ரோட்டர்டாம் ஓபனில் பங்கேற்றிருந்த ஃபெடரர், முன்பு 2012, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், இந்த சீசனில் அவர் தனது முதல் சுற்றில், தகுதிச்சுற்று வீரரான பெல்ஜியத்தின் ரூபன் பெமல்மன்ஸை சந்திக்கிறார்.