
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியதன்மூலம் பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாபின் இன்னிங்ûஸ மார்ட்டின் கப்டிலும், ரித்திமான் சாஹாவும் தொடங்கினர்.
ஹார்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் கப்டில் இரு பவுண்டரிகளை விரட்டினார்.
அதே ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய சாஹா, மெக்லீனாகான் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை வீசினார். இதனால் 2 ஓவர்களில் 29 ஓட்டங்களை எட்டியது பஞ்சாப். ஆனால், 3-ஆவது ஓவரை வீசிய பூம்ரா 3 ஓட்டங்கள் மட்டுமே கொடுக்க, மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் கப்டில் ஒரு சிக்ஸரையும், சாஹா இரு பவுண்டரிகளையும் விரட்ட, 4 ஓவர்களில் 51 ஓட்டங்களை எட்டியது பஞ்சாப்.
அந்த அணி 5.3 ஓவர்களில் 68 ஓட்டங்களை எட்டியபோது கப்டில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் மேக்ஸ்வெல், மும்பை பெளலர்களை பதம்பார்த்தார்.
கரண் சர்மா வீசிய 8-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல், ஹர்பஜன் சிங் வீசிய அடுத்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை வீசினார். தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், பூம்ரா பந்துவீச்சில் பவுண்டரியை விரட்டிய கையோடு, ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து ஷான் மார்ஷ் களமிறங்க, ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 31 பந்துகளில் அரை சதம் கண்டார் சாஹா. இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆட, 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எட்டியது பஞ்சாப்.
மெக்லீனாகான் வீசிய 16-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய மார்ஷ், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து சாஹாவுடன் இணைந்தார் அக்ஷர் படேல், இந்த ஜோடியும் அதிரடியாக ஆட, 18-ஆவது ஓவரில் 200 ஓட்டங்களைக் கடந்தது பஞ்சாப்.
பாண்டியா வீசிய கடைசி ஓவரில் அக்ஷர் படேலும், சாஹாவும் தலா ஒரு சிக்ஸரை விளாச, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்கள் குவித்தது. இந்த சீசனில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
சாஹா 93 ஓட்டங்கள், அக்ஷர் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய மும்பை அணியில் சிம்மன்ஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாச, பார்த்திவ் படேலும் அதிரடியாக ரன் சேர்த்தார். அக்ஷர் படேல் வீசிய 7-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை பறக்கவிட்ட சிம்மன்ஸ், 27 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் 7 ஓவர்களில் 82 ஓட்டங்களை எட்டியது மும்பை.
மோஹித் சர்மா வீசிய 9-ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்டிய படேல், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 99 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து நிதிஷ் ராணா களமிறங்க, மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முயன்றார் சிம்மன்ஸ். அது சிக்ஸர் என அனைவரும் எதிர்பார்க்க, பவுண்டரி எல்லையில் நின்ற கப்டில் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ரோஹித் சர்மா 5, நிதிஷ் ராணா 12 ரன்களில் வெளியேற, கிரண் போலார்டுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. அப்போது மும்பை வெற்றி பெற 7 ஓவர்களில் 108 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
பாண்டியாவும், போலார்டும் சிக்ஸரை பறக்கவிட, 5 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மட் ஹென்றி வீசிய 16-ஆவது ஓவரில் போலார்ட், பாண்டியா இருவரும் தலா 2 சிக்ஸர்களை பறக்கவிட, அந்த ஓவரில் 27 ஓட்டங்கள் கிடைத்தன.
இதன்பிறகு சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார். அதே ஓவரில் போலார்ட் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, 3 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
மோஹித் சர்மா வீசிய 18-ஆவது ஓவரில் கரண் சர்மா தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து ஹர்பஜன் சிங் களமிறங்க, கடைசி 2 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதனால் மும்பை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சந்தீப் சர்மா வீசிய 19-ஆவது ஓவரில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது மும்பை. இதனால் கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, அந்த ஓவரின் 2-ஆவது பந்தில் சிக்ஸரை விரட்டிய போலார்ட், அடுத்த 3 பந்துகளை வீணடிக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது பேட்டிங்கின்போது அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனையை ராஜஸ்தானுடன் பகிர்ந்து கொண்டது மும்பை.
போலார்ட் 50 ஓட்டங்கள், ஹர்பஜன் சிங் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.