சும்மா கெத்து காட்டிய இந்தியா… பாகிஸ்தானை ஓட..ஓட விரட்டிய ரோகித் சர்மா டீம் …8 விக்கெட் வித்தியாசத்தில் வாரிச்சுருட்டி சாதனை….

By Selvanayagam PFirst Published Sep 20, 2018, 12:30 AM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில்  துபாயில் இன்று ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்கியது. பரம எதிரிகள் மோதுவதால் வழக்கம் போல் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு எகிறியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்தித்தது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதில் புவனேஷ்வர் குமார், துவக்க வீரர்களான இமாம் உல்-ஹக், பஹார் ஜமானை ஆகியோரை உடனடியாக வெளியேற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம், சோயிப் மாலிக்கும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு போட்டியாக ரன் கணக்கை தொடங்கினர்.

4 வது ஓவரில் தொடங்கிய இவர்களுடைய கூட்டணி 21.2வது ஓவர் வரையில் நீடித்தது. இடைப்பட்ட ஓவர்களில் பாகிஸ்தானுக்கு நேர்த்தியான ரன் கணக்கை இருவரும் சேர்த்தனர். கூட்டணி வலுப்பெற்ற நிலையில் பாபர் அசாமை 47(62) ரன்களில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

இதற்கிடையே பந்து வீசும்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ஹர்திக் பாண்டியா கீழே விழுந்தார். பின்னர் அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். 

இதையடுத்து பாகிஸ்தானின் நட்சத்திர ஆட்டக்காரர் சோயிப் மாலிக் 43(67) ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுகளை கேதர் ஜாதவ் வரிசையாக வெளியேற்றினார்.

அப்போது பாகிஸ்தான் அணி 33.4 வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து திணறியது. இதனையடுத்து மோசமான நிலையை மேம்படுத்த பாகிஸ்தானின் பிற்பாதி ஆட்டக்காரர்கள் முயற்சி செய்தார்கள். இந்தியாவின் அபாரமான பந்துவீச்சுக்கு இடையே மெதுவாக ரன் சேர்த்து 150 ரன்களை கடந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து இந்தியாவிற்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 1விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். நேர்த்தியான துவக்கத்தை தந்த இந்த ஜோடியால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

 ரசிகர்களுக்கு அதிரடி விருந்து அளித்த ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா 52(39) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஷிகார் தவான் 46(54) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரின் நிதானமான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

முடிவில் ராயுடு 31(46) ரன்களும், தினேஷ் கார்த்திக் 31(37) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 29 ஒவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஷ்ரப், ஷதப் கான் ஆகியோர் தலா1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

click me!