மதுரையில் தொடங்கிய மாநில அளவிலான கால்பந்து போட்டியின் முதல்நாளில் மதுரை, புதுக்கோட்டை அணிகள் வெற்றிப் பெற்றன.
மதுரை கோ.புதூரில் தொன்போஸ்கோ இளையோர் இயக்கம் சார்பில் அருட்தந்தை பின்டோ பிரான்சிஸ் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளை தொடங்கி வைத்தார்
மதுரை தொன் போஸ்கோ ஐடிஐ மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் சென்னை, கோவை, நீலகிரி, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.
காலையில் நடைபெற்ற போட்டியில் மதுரையின் டோமினிக் சேவியர் அணியும், மதுரை அக்னி அணியும் மோதின.
இதில், டோமினிக் சேவியர் அணி சார்பில் சந்தானம், தினேஷ், சண்முகம், ரங்கசாமி, மதன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
அக்னி கால்பந்தாட்ட அணி சார்பில் கார்த்திக் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் டோமினிக் சேவியர் அணி வெற்றிப் பெற்றது.
மாலையில் நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அணியும், மதுரை டிவிஎஸ் அணியும் மோதின.
இதில், புதுக்கோட்டை மாவட்ட அணி சார்பில் தேவதரன், தீபக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதில் 2-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணி வெற்றி பெற்றது.
இப்போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை கால்பந்தாட்ட சங்கத் தலைவர் தனுஷ்கோடி, செயலர் சீனி மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.