இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்த விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் அனல் பறக்கும். அதிலும் கிரிக்கெட் என்றால் சொல்லவே தேவையில்லை.
பரஸ்பரம் ஆக்ரோஷமும் மோதலும் அதிரடியும் குறைவில்லாமல் இருக்கும். அந்தளவுக்கு இரு அணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி இரு நாட்டினராலும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படும்.
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இதன் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ”ஷப்மன் கில்”லின் அதிரடியான சதத்தால் 272 ரன்கள் குவித்தது. 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிரங்கிய பாகிஸ்தான், வெறும் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணியின் அரையிறுதி வெற்றி மற்றும் இந்த தொடர் முழுக்க இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்களும் கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணியை புகழ்ந்து வருகின்றனர்.
19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் பெருஞ்சுவர் டிராவிட்டும் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இந்திய அணியின் வெற்றி, சிறப்பான செயல்பாடுகள் மட்டுமல்லாது இந்திய வீரர்களின் ஒழுக்கமும் பெரிதும் பாராட்டப்படுகிறது. அதற்குக் காரணமும் டிராவிட் தான் என சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ஏதோ எதிரி நாட்டுடனான போட்டியாக பார்க்கப்படும் நிலையில், இன்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள், பலரது மனதை வென்றுவிட்டது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் ஷூ கயிற்றை மாட்டிவிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. நாங்கள் போட்டியாளர்கள் தானே தவிர எதிரிகள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில் அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.