அவரு நல்லா ஆடியிருக்கலாம்.. ஆனால் உலக கோப்பையில் அணியில் இருக்கமாட்டார்!! கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Feb 11, 2019, 3:15 PM IST
Highlights

உலக கோப்பைக்கான ஆல்ரவுண்டர் தேர்வாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தாலும் அவர் உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கான ஆல்ரவுண்டர் ஆப்சனாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளதால் விஜய் சங்கருக்கான அவசியம் இருக்காது என்பதால் அவரை உலக கோப்பைக்கு அழைத்து செல்ல வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, விஜய் சங்கரின் பேட்டிங் மேம்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட்டும் நன்றாக ஆடினார். ஆனால் விஜய் சங்கர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று நான் கருதவில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!