அஷ்வின் - குல்தீப்.. யாரு பெஸ்ட் ஸ்பின்னர்..? மழுப்பாமல் அதிரடியா பதில் சொன்ன ஸ்பின் லெஜண்ட்

By karthikeyan VFirst Published Feb 11, 2019, 2:19 PM IST
Highlights

உலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின். 
 

தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிடுகின்றனர். 

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் இன்னும் கணிக்காததால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகின்றனர். இவர்கள் இருவருமே உலக கோப்பையில் ஆட உள்ளனர்.

ஆனால் அஷ்வின் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் கவுதம் காம்பீர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தரமான ஸ்பின்னர் என்றைக்குமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் இப்போதும் அஷ்வின் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்தான். அதனால் அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், அஷ்வினை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்ட இருப்பதை மறைமுகமாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதில் தவறில்லை. அதேநேரத்தில் அஷ்வினின் திறமையை குறைத்து மதிப்பிடுவது என்பது தவறான செயல். அதைத்தான் சாஸ்திரி செய்துவருகிறார். 

உள்நாட்டில் மட்டுமே அஷ்வின் சிறப்பாக வீசியுள்ளதாகவும், வெளிநாட்டு தொடர்களை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் சிறப்பாக வீசியுள்ளதாகவும் அதனால் குல்தீப்பே சிறந்த ஓவர்சீஸ் பவுலர் என்றும் தெரிவித்தார். 

உலக கோப்பையில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார் அஷ்வின். 

இந்நிலையில், அஷ்வின் - குல்தீப் ஆகிய இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்று சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முரளிதரன், குல்தீப் யாதவ் நன்றாக பந்துவீசுகிறார். அதற்காக அஷ்வினை விட சிறந்த ஸ்பின்னர் என்றெல்லாம் கூற முடியாது. ஆஃப் ஸ்பின்னர்களில் உலகளவில் அஷ்வின் தான் சிறந்த ஸ்பின்னர். அஷ்வினை சிறந்த ஸ்பின்னர் என்றதும் நாதன் லயன்? என்று கேட்பார்கள். அவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமே அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆனால் அஷ்வின் அவர் ஆடும் எல்லா இடங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் உள்நாட்டில்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றெல்லாம் கூறுவது தவறு. நான் வீழ்த்திய 800 டெஸ்ட் விக்கெட்டுகளில் 500 விக்கெட்டுகளை உள்நாட்டில்தான் வீழ்த்தினேன் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். 
 

click me!