பயிற்சி போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி, இங்கிலாந்து சென்று முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடன் இன்று முதல் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர்.
இதற்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா, 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். மயன்க் அகர்வாலும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 37 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.
ஷ்ரேயாஸ் - ரிஷப் ஜோடி நம்பிக்கை அளித்தது. அந்த நம்பிக்கையும் நிலைக்கவில்லை. ஷ்ரேயாஸ் 42 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், அரைசதம் கடந்து 64 ரன்களில் அவுட்டானார். களத்திற்கு வந்த முதல் பந்திலேயே அவுட்டாகி விஜய் சங்கர் அதிர்ச்சியளித்தார். அக்ஸர் படேலும் தீபக் சாஹரும் சிறிது நேரம் நிலைத்து ஆடி, ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். ஆனாலும் 46.3 ஓவரிலேயே 232 ரன்களுக்கு இந்திய ஏ அணி ஆல் அவுட்டாகியது.
இதையடுத்து 233 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க வீரர் டாம் கோலர் மட்டும் 7 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு மற்றொரு தொடக்க வீரர் நிக் கபின்ஸுடன் சாம் ஹெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 134 ரன்களை குவித்தது.
அரைசதம் கடந்த சாம் ஹெய்ன், 54 ரன்களில் அவுட்டானார். ஆனால் சிறப்பாக ஆடி சதமடித்த நிக் கபின்ஸ், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 41.2 ஓவருக்கே இலக்கை எட்டி இங்கிலாந்து லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.