முரளி விஜய் மீது பழி சுமத்துவது சரியல்ல - கும்ப்ளே

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
முரளி விஜய் மீது பழி சுமத்துவது சரியல்ல - கும்ப்ளே

சுருக்கம்

ஷாட் பால் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கும் விவகாரத்தில் இந்திய அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மீது பழி சுமத்துவது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளில், களத்தில் மிகுந்த நிலைத்தன்மையுடன் ஆடும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக முரளி விஜய் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள் அடித்து, இந்தத் தொடரை நல்ல முறையிலேயே முரளி விஜய் தொடங்கினார்.

இருப்பினும், ஷாட் பால் பந்துவீச்சில் விக்கெட்டை இழப்பது அவரது பலவீனமாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் மீது பழி சுமத்துவது சரியல்ல. அவர் அதிலிருந்து மீண்டு வந்து, அதிகம் ரன்கள் எடுப்பார்.

வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது, ஷாட் பால்களை சந்திப்பது குறித்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கி உதவுகிறோம். அத்தகைய பந்துவீச்சில் அவர் ஏன் ஆட்டமிழக்கிறார் என்பதை மிகவும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்று கருதுகிறேன்.

போட்டியின்போது காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதுபோன்ற காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்ய இயலவில்லை. இருப்பினும் நமது அணி சிறப்பாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 3 ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களை நாம் கொண்டிருந்தோம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் முரளி விஜய் காயமடைந்தார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் ஷிகர் தவன் காயமுற்றார். அதே தொடரில் கெüதம் கம்பீரும் காயமடைந்தார். இந்த நிலை இப்படியே தொடராது என்று நம்புகிறேன்.

பார்த்திவ் படேலைப் பொறுத்த வரையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அணிக்குத் திரும்பியுள்ளார். இருந்தபோதும், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட அவர், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நிலைக்கச் செய்தார்.

இப்போதும் சிறுவன் போலவே காட்சி அளிக்கும் அவர், கடந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக மிகவும் பொறுப்புடன் செயல்பட்டார்.

அதேபோல், இந்திய பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். அதில் உமேஷ் யாதவும், முகமது சமியும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் பணிச்சுமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதில் 18 மாதங்களுக்குப் பிறகு களத்துக்கு வந்துள்ள சமி, இத்தகைய அளவுக்கு மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. சுழற்பந்துவீச்சாளர்கள் ரன்கள் குவித்து அணிக்கு உதவியது முக்கியமானது.

150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்து அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது ஜெயந்த் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அரைசதம் கடந்து சிறப்பாக பங்களிப்பு செய்தனர். அவர்களால் அணியின் ஸ்கோர் 400-ஐ எட்டியது மகிழ்ச்சிக்குறியது.
நடுவர் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் டிஆர்எஸ் முறையை அணியினர் கையாண்ட விதம் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது என்று அனில் கும்ப்ளே கூறினார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?