தல தோனியின் சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா.. மாஸ் கொண்டாட்டத்துக்கு தயாரா.?

By Asianet TamilFirst Published Oct 18, 2021, 10:27 PM IST
Highlights

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வெற்றி விழா நடத்த உள்ளதாக அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

துபாயில் நடந்த ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், ஐபிஎல் கோப்பையுடன்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சென்னை திரும்பியது. பின்னர் கோப்பையை சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சிஎஸ்கே அணி இல்லாமல் எம்.எஸ்.டோனி கிடையாது. டோனி இல்லாமல் சிஎஸ்கே கிடையாது. துபாயில் டி20 உலகக் கோப்பைக்கு முடிந்த பிறகு டோனி நாடு திரும்புவார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். ஐபிஎல் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் டோனி வழங்குவார். அந்த வெற்றி விழாவை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளோம். அப்போதுதான் மக்களும் கலந்துகொள்ள முடியும்” என்று சீனிவாசன் தெரிவித்தார். 

click me!