இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா மற்றும் கருணரத்னே ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். கருணரத்னே 52 ரன்களும் குணதிலகா 55 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் ஆஷன் பன்டாரா அரைசதம் அடித்தார். அவர் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழக்க, இவர்கள் மூவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 49 ஓவரில் 232 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.
233 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் - எவின் லூயிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த லூயிஸ் 65 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்து வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஆனால் வெற்றி இலக்கை எட்ட வெறும் 18 ரன்களே மீதமிருந்த நிலையில் 110 ரன்னில் ஆட்டமிழந்தார்.
47வது ஓவரிலேயே இலக்கை எட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.