இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்..?

By karthikeyan VFirst Published Jan 2, 2023, 8:49 PM IST
Highlights

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டுவருகிறார். ரவி சாஸ்திரிக்கு பின் ராகுல் டிராவிட் இப்பொறுப்பை ஏற்றார். ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட் மீது பயிற்சியாளராக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்திய அண்டர் 19 பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோதுதான் 2018ம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையிலான அண்டர் 19 அணி உலக கோப்பையை வென்றது. பிரித்வி ஷா, இஷான் கிஷன், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய சிறந்த இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்ததுடன், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களை இந்திய அணிக்கு தயார்படுத்தி அனுப்பினார்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை..?

அதனால் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2021 டி20 உலக கோப்பைக்கு பின் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பெரிதாக சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய தொடர்களிலும் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தது இந்திய அணி. 

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையுடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட்டுக்கு இந்த ஒருநாள் உலக கோப்பை, ஒரு பயிற்சியாளராக முக்கியமான தொடர். அவரது பயிற்சிக்காலத்தில் ஒரு ஐசிசி கோப்பையையாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார்.  அந்தவகையில், அது அவருக்கு முக்கியமான தொடர். 

அந்த உலக கோப்பையை ஜெயித்தால் ராகுல் டிராவிட் பதவிக்கால நீட்டிப்பிற்கு விண்ணப்பிப்பார். ஒருவேளை அந்த தொடரிலும் தோற்கும்பட்சத்தில் ராகுல் டிராவிட் பதவியில் நீட்டிக்க விரும்பமாட்டார். ஒருவேளை ராகுல் டிராவிட் பதவிநீட்டிப்பு கோரவில்லை என்றால், அடுத்த தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்துவரும் விவிஎஸ் லக்‌ஷ்மண், கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் ஓய்வில் இருந்த ஜிம்பாப்வே, அயர்லாந்து, இலங்கை சுற்றுப்பயணங்களிலும், டிராவிட் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்பட்டார்.

இந்திய அணியின் பொறுப்பு பயிற்சியாளராக அவ்வப்போது செயல்பட்ட அனுபவம் கொண்ட லக்‌ஷ்மண் தான் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!