கபில் தேவ் மாதிரியான மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர் அதன்பின்னர் இந்திய அணியில் யாருமே இல்லை என்று விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் முன்னாள் கேப்டன் கபில் தேவ். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் 1983ல் உலக கோப்பையையும் வென்று கொடுத்தவர் கபில் தேவ்.
கபில் தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு அவரை மாதிரியான தரமான ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை. 2000ம் ஆண்டுகளில் இர்ஃபான் பதான் நல்ல ஆல்ரவுண்டராக இருந்தார். ஆனால் அவர் இந்திய அணியில் நீடிக்கவில்லை. இப்போது ஹர்திக் பாண்டியா அந்த மாதிரியான ஒரு ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஃபிட்னெஸ் பிரச்னை இருப்பதால், அண்மைக்காலமாக அவர் பந்துவீசுவதில்லை.
இந்திய அணியிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி, ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டுமே ஆடுகிறாரே தவிர பந்துவீசுவதில்லை. அவரை ஆல்ரவுண்டர் என்று சொல்லமுடியாத அளவிற்கு, பந்துவீசுவது அண்மைக்காலமாக முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண், ஆல்ரவுண்டராக இருப்பது மிகக்கடினம். கபில் பாஜி விக்கெட்டுக்கும் வீழ்த்தக்கூடிய, ரன்களும் அடிக்கக்கூடிய வீரர். கபில் தேவ் இந்தியாவின் அல்டிமேட் மேட்ச் வின்னர். ஆனால் இப்போதெல்லாம் வேலைப்பளு காரணமாக அப்படிப்பட்ட ஆல்ரவுண்டர்களை காண்பது கடினம். 3 விதமான போட்டிகளில் ஆடுவதால் இந்திய ஆல்ரவுண்டர்கள் வேலைப்பளுவை நிர்வகிப்பது கடினமாக உள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர், துரதிர்ஷ்டவசமாக காயமடைந்ததால், பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஏதேனும் ஒன்றை சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றார் லக்ஷ்மன்.
கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 5248 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 253 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 3783 ரன்களை குவித்துள்ளார்.