IPL 2022 மெகா ஏலம்: டேவிட் வார்னரை அந்த அணி தான் கண்டிப்பாக எடுக்கும்..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 16, 2021, 6:24 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து வெளியேறிய டேவிட் வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று வீரேந்திர சேவாக் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.

ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை. வார்னர் மாதிரியான ஒரு கிரேட் பிளேயரை ஃபார்மை காரணம் காட்டி ஓரங்கட்டியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வார்னரின் மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என அந்த அணி கவலைப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வார்னர். 

அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 53 ரன்கள் என குவித்த வார்னர், ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

தன்னை ஓரங்கட்டிய சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வார்னர் வெளிவந்துவிட்ட நிலையில், அடுத்த  ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் (அகமதாபாத், லக்னோ) சேர்ந்திருப்பதால், வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டதால் ஆர்சிபி அணிக்கு கேப்டன் தேவை என்பதால், ஆர்சிபி அணி தான் வார்னரை எடுக்கும் என்று பிராட் ஹாக் கருத்து கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், 2 புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில், 2 புதிய அணிகளில் ஒன்று, தொடக்க வீரர் மற்றும் கேப்டன் என்ற முறையில் டேவிட் வார்னரை எடுக்க முனைவார்கள். வார்னர் மாதிரி மேலும் 2 வீரர்களை எடுத்து அந்த 3 வீரர்களை சுற்றி அணியை கட்டமைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!