Virat Kohli Rohit Sharma Rift: நானும் இரண்டரை வருஷமா இதை சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்..! அட போங்கடா - கோலி

By karthikeyan VFirst Published Dec 15, 2021, 10:04 PM IST
Highlights

ரோஹித் சர்மாவுக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான மோதலோ, மனக்கசப்போ இல்லையென்று இரண்டரை ஆண்டுகளாக சொல்லி சொல்லி சோர்வடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் விராட் கோலி.
 

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாகவும், இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டுவருகிறது.

ஆனால் அப்படி எந்தவிதமான விரிசலும் இல்லை. ரோஹித்துக்கும் தனக்கும் இடையே நல்ல புரிதலும் நல்ல உறவும் இருப்பதாக விராட் கோலி பலமுறை தெரிவித்திருக்கிறார். இதையே ரோஹித் சர்மாவும் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுமாதிரியான சர்ச்சை கருத்துகள் உலா வந்தாலும், அவற்றிற்கு மத்தியில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் ரோஹித் - கோலி இடையேயான மோதல் என்ற பேச்சு ஹாட் டாபிக்கானது. 

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத தன்னை, கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, ரோஹித்தை கேப்டனாக நியமித்தது பிடிக்காததால், ரோஹித்தின் கேப்டன்சியில் ஆட விரும்பாத கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கேட்டதாக தகவல் பரவியது. 

ஆனால் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி, தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடப்போவதாகவும், தனது ஆதரவும் ஒத்துழைப்பும் என்றைக்குமே ரோஹித்துக்கு இருக்கும் என்றும் தடாலடியாக தெரிவித்தார்.

மேலும், தங்கள் இருவருக்கும் இடையே மோதல் நீடிப்பதாக பேசப்படுவது குறித்து பேசிய விராட் கோலி, எனக்கும் ரோஹித்துக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. இதையே இரண்டரை ஆண்டுகளாக சொல்லி சொல்லி நான் சோர்வடைந்துவிட்டேன். அணியை கீழே தள்ளும் எந்த செயலையும் நான் செய்யமாட்டேன். எனக்கும் ரோஹித்துக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று விராட் கோலி ஒன்றுக்கு இரண்டு முறை தெரிவித்தார்.
 

click me!