ராகுல் சார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்; ஆனால் எனக்கு இதுதான் அவருடன் முதல் தொடர்..! சூர்யகுமார் ஆர்வம்

By karthikeyan VFirst Published Jul 6, 2021, 4:59 PM IST
Highlights

ராகுல் டிராவிட் பற்றி மற்ற வீரர்கள் மூலம் நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவருடன் தனக்கு இதுதான் முதல் தொடர் என்றும், அதனால் ராகுல் டிராவிட்டுடன் பணிபுரிய மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. 

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருந்ததால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடும் வீரர்களில் பெரும்பாலானோர், ராகுல் டிராவிட் அண்டர் 19 இந்திய அணி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தபோது அவர் உருவாக்கிய வீரர்கள் தான். 

அந்தவகையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஏற்கனவே ஆடிய வீரர்கள் மீண்டும் டிராவிட்டின் பயிற்சியில் ஆட ஆர்வமாக உள்ளனர். டிராவிட்டின் பயிற்சியில் ஆடாத வீரர்கள் முதல்முறையாக, மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் ஆட ஆர்வமாக உள்ளனர்.

அந்தவகையில், ராகுல் டிராவிட் பயிற்சியில் ஆடுவது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், ராகுல் சார் எங்களுடன் இருப்பது மிகப்பெரிய விஷயம். அவரைப்பற்றி மற்ற வீரர்களின் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ராகுல் டிராவிட் சாருடன் எனக்கு இதுதான் முதல் சுற்றுப்பயணம். எனவே அவருடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
 

click me!