சூர்யகுமார், ராகுல் காட்டடி அரைசதம்; கோலி, டிகே அதிரடி ஃபினிஷிங்!ஆளாளுக்கு அதிரடி.. அரண்டுபோன தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 9:06 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 20 ஓவரில் 237 ரன்களை குவித்த இந்திய அணி, 238 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது. 

இதுவரை இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிராத இந்திய அணி, முதல் முறையாக டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! கேப்டன் தவான்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அடித்து ஆட பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை குவித்தது. 37 பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ஆனால் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க பவுலிங்கை தெறிக்கவிட்டார். ரபாடா வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். அதிரடியாக ஆடி 18 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 22 பந்தில் 61 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.

இதையும் படிங்க - பும்ராவிற்கு நிகரான மாற்றுவீரர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்துலயே இல்ல! இந்திய அணிக்கு பேரிழப்பு- ஷேன் வாட்சன்

அதிரடியாக ஆடிய விராட் கோலி 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை விளாச, தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என அனைவருமே தங்களது ரோலை செவ்வனே செய்ய, 20 ஓவரில் 237 ரன்களை குவித்த இந்திய அணி, 238 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!