IND vs NZ இவ்வளவு மட்டமாவா பேட்டிங் ஆடுவீங்க..? நியூசிலாந்தின் அணுகுமுறையை கடுமையாக விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 6:04 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் அடித்தன. 

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ய, 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் சில ஓவர்கள் எஞ்சியிருக்க, இந்திய அணி டிக்ளேர் செய்துவிட்டு நியூசிலாந்தை இலக்கை விரட்ட பணித்தது.

284 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தாலும், டாம் லேதமும், நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில்லும் இணைந்து அபாரமாக ஆடி கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் நியூசிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் சோமர்வில்லும்(36), டாம் லேதமும் ஆட்டமிழந்த பின்னர், அந்த அணி வெற்றியை பற்றி யோசிக்கவேயில்லை. முழுக்க முழுக்க டிராவிற்காக ஆடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். இது அவர்கள் ஆடிய விதத்திலிருந்தே தெரிந்தது. 2வது செசன் முடிவில் 4 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தது நியூசிலாந்து அணி. டிராவிற்காக கவனமாக ஆடியும் கூட, கடைசி செசனில் 5 விக்கெட்டுகளை இழந்தது.

விரட்டக்கூடிய இலக்காக இருந்தபோதிலும் கூட, அதை விரட்ட முயற்சி கூட செய்யவில்லை நியூசிலாந்து அணி. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், நியூசிலாந்து அணியின் பேட்டிங் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் டெரிஃபிக்காக இருந்தது. ஆனால் அதன்பின்னர் நியூசிலாந்து அணி அவர்களை அவர்களே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக்கொண்டார்கள். அவர்கள் வெற்றிக்காக ஆடவில்லை. அவுட்டாகாமல் இருந்தால்போதும் என்ற மனநிலையில் ஆடினார்கள்.

கடைசி நாள் ஆட்டத்தின் லன்ச் வரை ரஹானேவும் டிராவிட்டும் கவலையாக இருந்திருப்பார்கள். டாம் லேதமும், சோமர்வில்லும் ஆடிய விதத்தை பார்த்து கவலையடைந்திருப்பார்கள். வெற்றிக்கான அடித்தளத்தை லேதமும் சோமர்வில்லும் அமைத்து கொடுத்தும் அந்த அணி வெற்றிக்காக ஆடவில்லை என்று கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

click me!