ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா.! பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 9:56 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் தோற்றது குறித்து முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் சிறந்த முன்னாள் பேட்ஸ்மேனான யூனிஸ் கானை, அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

யூனிஸ் கானும் வீரர்களுக்கு டிப்ஸ்களை கொடுத்துவருகிறார். யூனிஸ் கான் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப முதல் இன்னிங்ஸி ஷான் மசூத் சிறப்பாக ஆடி சதமடித்தார். பாபர் அசாம் அரைசதம் அடித்தார். ஷான் மசூத் 156 ரன்களையும் பாபர் அசாம் 69 ரன்களையும் விளாச, ஷதாப் கான் தன் பங்கிற்கு 46 ரன்கள் அடித்து கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் இவர்கள் மூவரை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஷான் மசூத், பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 219 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 169 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட்டானதால். 277 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி 250--300 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் அடித்திருந்தால் ஜெயித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டு, 169 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்டது பாகிஸ்தான். 

277 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு இது எளிய இலக்கு. ஆனால் அந்த இலக்கை அவ்வளவு எளிதாக அடிக்கவிடவில்லை பாகிஸ்தான். 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்த அந்த சூழலில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் தவறவிட்ட பாகிஸ்தான், பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரையும் அடிக்கவிட்டனர். அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெற்றியை தாரைவார்த்தனர். இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  

இந்த போட்டியின் முடிவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் மிகப்பெரிய பவுலிங் ஜாம்பவனுமான வாசிம் அக்ரம், அஃப்ரிடி மற்றும் முகமது யூசுஃப் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். வெற்றி பெற வாய்ப்பிருந்தும், கேப்டன் அசார் அலியின் கேப்டன்சி குறைபாட்டால் தோல்வியை தழுவ நேரிட்டதாக கூறியிருந்தார் வாசிம் அக்ரம். 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர செய்து, 350-400 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கலாம். ஆனால் ஒரு பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. நீங்கள் பெரிய வீரராக வளர்ந்து, பெரும் புகழையும் பெயரையும் சம்பாதிக்க வேண்டுமென்றால், இதுமாதிரியான சூழல்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 107 ரன்கள் முன்னிலை பெற்றும், அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை என்றால், பெரிய வீரர் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை.

ஷான் மசூத் துரதிர்ஷ்டசாலி. ஆனால் அவர் அவரது கடமையை முதல் இன்னிங்ஸில் சரியாக செய்துவிட்டார். ஆசாத் ஷாஃபிக் ரன் அவுட்; அது அவரது தவறு. பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால் மேட்ச் வின்னராக திகழ வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

பாபர் அசாமை விராட் கோலி, வில்லியம்சன் ஆகிய ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு அவரை மிகப்பெரிய பேட்ஸ்மேன் என்று, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் புகழ்ந்துதள்ளுகின்றனர். இந்நிலையில், சிறந்த வீரராக இருந்தாலும், அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் ஒரு போட்டியில் சரியான நேரத்தில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை என்றால், சிறந்த வீரர் என்று மார்தட்டிக்கொள்வதில் பயனில்லை என்பதை அக்தர் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல தெரிவித்துள்ளார்.
 

click me!