இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 296 ரன்களை குவித்து, 297 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் கைஃபானோ மற்றும் சகாப்வா ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். கைஃபானோ 42 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் எர்வின் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் சகாப்வா 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4ம் வரிசையில் இறங்கிய சீன் வில்லியம்ஸ் ஒருமுனையில் நங்கூரம் போட்டு அபாரமாக பேட்டிங் ஆடி சதமடிக்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸின் அபார சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்த ஜிம்பாப்வே அணி, 297 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.