அந்த 3 டீமும் உலக கோப்பை அரையிறுதிக்கு போறது உறுதி.. நாலாவது இடத்தை பிடிக்க 2 டீமுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் - லெஜண்ட் சச்சின்

By karthikeyan VFirst Published May 23, 2019, 6:05 PM IST
Highlights

உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணி ஆகியவை சிறந்த அணிகளாக திகழ்கின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகின்றன.

இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. 

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்தும் அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்தும் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் லெஜண்ட் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். எஞ்சிய ஒரு இடத்தை பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணி பிடிக்கும் என்று சச்சின் தெரிவித்துள்ளார். 
 

click me!