உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

By karthikeyan VFirst Published Nov 25, 2022, 5:46 PM IST
Highlights

உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களை ஜெயிக்க வேண்டுமென்றால் சீனியர் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவதை தவிர்க்க வேண்டும் என்று ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லத் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்திய அணி தோற்றது கூட பிரச்னையில்லை. ஆனால் தோற்ற விதம் படுமோசமானது; மேலும் வருத்தமளிக்கக்கூடியது. இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது.

டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக பும்ரா, ஜடேஜா ஆடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. டி20 உலக கோப்பை தொடங்கிய 2007ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் அடுத்த கோப்பைக்கான காத்திருப்பு 15 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், இன்னும் தொடர்கிறது.

NZ vs IND: இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த டாம் லேதம் அபார சதம்! முதல் ODI-யில் நியூசிலாந்து அபார வெற்றி

இந்திய அணியால் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களை ஜெயிக்க முடியாததற்கு ஐபிஎல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. 2007ல் டி20 உலக கோப்பை தொடங்கப்பட்டதும் முதல் கோப்பையை வென்ற இந்திய அணியால், 2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்ல முடியாததை சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லத், உலக கோப்பை ஜெயிக்க வேண்டுமென்றால், ஐபிஎல்லில் சீனியர் வீரர்கள் ஆடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் லத், கடந்த 7-8 மாதங்களாக இந்திய அணி நிலையான அணியாகவே இல்லை. உலக கோப்பைக்கு தயாராகும்போது தெளிவு வேண்டும். நிலையான, வலுவான அணியாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக திடீரென ஒருவர் வந்து இன்னிங்ஸை தொடங்குவார். திடீரென ஒருவர் வந்து பந்துவீசுவார். அணியில் நிலைத்தன்மையே இல்லை. பணிச்சுமை என்பதையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அனைவரும் ப்ரொஃபஷனல் கிரிக்கெட் வீரர்கள். எனவே பணிச்சுமை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்படியென்றால் ஐபிஎல்லில்  ஆடாமல் இருக்க வேண்டியதுதானே..? ஐபிஎல்லில் ஏன் ஆடுகிறார்கள்..? உலக கோப்பையை ஜெயிக்க வேண்டுமென்றால் ஐபிஎல்லில் ஆடக்கூடாது என்று தினேஷ் லத் விளாசினார்.

ஐபிஎல்லில் இரண்டரை மாதங்கள் முழுமையாக ஆடும் இந்திய முன்னணி வீரர்கள் சிலர், குறிப்பாக பவுலர்கள் ஐபிஎல்லில் காயமடைய நேர்வதால், அவர்களால் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான பெரிய தொடர்களில் இந்திய அணிக்காக ஆடமுடியாமல் போகிறது. அது இந்திய அணிக்கும் பெரும் பின்னடைவாகவும் அமைகிறது. பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்கள் டி20 உலக கோப்பையில் ஆடாதது பெரும் பின்னடைவாக அமைகிறது.

அதுமட்டுமல்லாது ஒரு அணியை கட்டமைத்து எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கையில், ஐபிஎல்லில் திடீரென ஒரு சில இன்னிங்ஸ்களை சிறப்பாக ஆடும் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆட அவர்களை விட சிறந்த வீரர்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல்லில் நன்றாக ஆடியதால் அவர்கள் இந்திய அணியில் எடுக்கப்படுகிறார்கள். ஐபிஎல்லில் இந்தியாவில் உள்ள பவுலிங்கிற்கு கொஞ்சம் கூட சாதகமில்லாத ஆடுகளங்களில் அடித்து ஆடும் வீரர்களை நம்பி, ஐசிசி தொடர்களுக்கு அழைத்துச்சென்று வெளிநாட்டு ஆடுகளங்களில் தரமான ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக அவர்கள் சொதப்புவதால் தோற்று வெளியேறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது இந்திய அணி.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

ஐபிஎல் இந்திய அணி தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பலமான நல்ல பேலன்ஸான அணியை தேர்வு செய்யாமல் சில மோசமான தேர்வுகள் செய்யப்படுகின்றன. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
 

click me!