NZ vs IND: இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த டாம் லேதம் அபார சதம்! முதல் ODI-யில் நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 25, 2022, 3:06 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரைல் மிட்செல், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, மேட் ஹென்ரி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 124 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில் சரியாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங்  ஆட, மறுமுனையில் ரிஷப் பண்ட்(15) மற்றும் சூர்யகுமார் யாதவ் (4) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி 38 பந்தில் 36 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 76 பந்தில் 80 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பின், 46வது ஓவரில் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர், 16 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 306 ரன்களை குவித்தது.

307 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 22 ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே (24) மற்றும் டேரைல் மிட்செல் (11) ஆகிய இருவரையும் உம்ரான் மாலிக் வீழ்த்தினார். 20 ஓவரில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

அதன்பின்னர் கேன் வில்லியம்சனும் டாம் லேதமும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவரும் களத்தில் நிலைத்து நின்று விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக ஆடினர். நன்றாக செட்டில் ஆன பின், அணியின் ஸ்கோரும் ஓரளவிற்கு உயர்ந்தபின், டாம் லேதம் அடித்து ஆட ஆரம்பித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த டாம் லேதம், இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்தார். அதிரடியாக ஆடிய லேதம் 104 பந்தில் 19 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 145 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். கேன் வில்லியம்சனும் 94 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடியதால் 48வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

இந்த வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.
 

click me!