
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய், கீமோ பால்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர். சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ரிஷப் பண்ட் 14 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கும் வெளியேற, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 44 பந்தில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜாவும் 16 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக், அதிரடியாக ஆடி சிறப்பாக முடித்து கொடுத்து, தான் தான் இந்திய அணியின் ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து முடித்து கொடுத்தார்.
ரோஹித் சர்மாவின் பொறுப்பான அரைசதம் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்த இந்திய அணி, 191 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.