
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்திலும் சிக்ஸர் விளாசி ரோவ்மன் பவல் பரபரப்பை கிளப்ப, அந்த ஓவரின் 3வது பந்தை மெக்காய் நோ பாலாக வீசினார். ஆனால் அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்காததால் பெரும் சர்ச்சை வெடித்தது. டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். கேப்டன் ரிஷப் பண்ட், வீரர்களை களத்தை விட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியினர் இவ்வளவு உணர்ச்சிவசமாக அந்த விஷயத்தை அணுகியதற்கு காரணம், ரோவ்மன் பவல் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி வெற்றிநம்பிக்கையை விதைத்ததுதான். ஒருவேளை அதற்கு நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதனால்தான், டெல்லி அணியினர் ஓவர் ரியாக்ட் செய்தார்கள்.
ரிஷப் பண்ட், பிரவீன் ஆம்ரேவே இப்படி ரியாக்ட் செய்தார்கள் என்றால், ரிக்கி பாண்டிங் களத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால் அவர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், அவரால் அந்த போட்டிக்கு நேரில் வரமுடியவில்லை.
இந்நிலையில், கேகேஆருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், அந்த சர்ச்சை சம்பவம் குறித்து பேசிய டெல்லி கேபிடள்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், எல்லாமே தவறாக நடந்துவிட்டது. அம்பயர் செய்தது தவறு. அதற்காக, எங்கள் அணியின் உதவி பயிற்சியாளர் களத்திற்குள் சென்றதும் தவறு. எங்கள் அணியினர் ரியாக்ட் செய்த விதத்திற்காக நாங்கள் சந்தோஷமோ அல்லது பெருமையோ படவில்லை. அதுதொடர்பாக அணியினரிடம் பேசினேன் என்று பாண்டிங் தெரிவித்தார்.