ஆர்சிபி அணி நிர்வாகம் ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி.
ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே களமிறங்கும் ஆர்சிபி அணி, 14வது சீசனிலும் அதே எதிர்பார்ப்பில் தான் இறங்குகிறது. அந்தவகையில் 14வது சீசனுக்கான ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை, மற்ற அணிகள் போட்டி போட்ட போதிலும், விட்டுக்கொடுக்காமல் அடம்பிடித்து அதிக தொகை கொடுத்து எடுத்தது ஆர்சிபி அணி.
நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கும், ஃபினிஷர் மற்றும் ஆல்ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கும் ஏலத்தில் எடுத்த ஆர்சிபி அணி, மற்றொரு ஆல்ரவுண்டரான டேனியல் கிறிஸ்டியனை ரூ.4.8 கோடிக்கு எடுத்தது.
இதுபோக, ஆந்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத், கேரளாவை சேர்ந்த சச்சின் பேபி, சுயாஷ் பிரபுதேசாய், முகமது அசாருதீன், ரஜாத் பட்டிடார் ஆகிய உள்நாட்டு வீரர்களை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்தது.
ஆர்சிபி அணி நிர்வாகத்தின் வீரர்கள் தேர்வால் மகிழ்ச்சியடைந்து அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, ஏலத்தில் எங்கள் அணி சிறப்பான வீரர்களை தேர்வு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணியின் பேலன்ஸ் மற்றும் பலத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்ப வீரர்கள் தேர்வு அமைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 2 அடி உயர்வோம் என்று கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.