ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியில் விராட் கோலி ஓபனிங்கில் இறக்கப்படுவது ஏன் என கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி ஃபாஃப் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் அருமையாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது.
ஃபாஃப் டுப்ளெசிஸ் தலைமையில் இந்த சீசனில் சிறப்பாக ஆடிவரும் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. 9வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிவருகிறது.
இந்த சீசனில் விராட் கோலி சரியாக ஆடமுடியாமல் திணறிவருகிறார். கடந்த 2 ஆண்டுகளாகவே பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத விராட் கோலி, இந்த சீசனிலும் தடுமாறுகிறார். 8 போட்டிகளில் வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி.
இந்த சீசனில் 3ம் வரிசையில் ஆடிவந்த கோலி, ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஓபனிங்கில் இறங்கவுள்ளார். அதை டாஸ் போடும்போதே உறுதி செய்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டுப்ளெசிஸ், வீரர்களுக்கு முடிந்தவரை போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே விராட் கோலியை ஓபனிங்கில் இறக்கி முடிந்தவரை அவரை விரைவில் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஓபனிங்கில் இறக்கப்படுகிறார். அவரை நாம் பார்த்த பழைய விராட் கோலியாக பார்க்க விரும்புகிறோம் என்று டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார்.