LSG vs RCB: எலிமினேட்டரில் LSG-யை வீழ்த்தி 2வது தகுதிப்போட்டிக்கு முன்னேறியது RCB

By karthikeyan VFirst Published May 26, 2022, 1:46 AM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டரில்  14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது தகுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி அணி.

ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடந்துவரும் எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேற நேரிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்கின.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியில் 2 மாற்றங்களும் ஆர்சிபி அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டன. லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு நீக்கப்பட்டு க்ருணல் பாண்டியா, துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டனர். ஆர்சிபி அணியில் சிராஜ் வந்ததால் சித்தார்த் கவுல் நீக்கப்பட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), ராகுல் (கேப்டன்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மோசின் கான், ஆவேஷ் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.

ஆர்சிபி அணி:

டுப்ளெசிஸ் (கேப்டன்), கோலி, ரஜாத் பட்டிதார், மேக்ஸ்வெல், லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ்.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ் கோல்டன் டவுட்டாக, மேக்ஸ்வெல் 9 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியின் முக்கியமான 3 வீரர்களும் சோபிக்காதபோதிலும், அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதார் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். பட்டிதாருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார். 

கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் ஆகிய 3 பெரிய வீரர்களும் சொதப்பிய நிலையில், ரஜத் பட்டிதார் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார். அதிரடியாக ஆடிய ரஜத் பட்டிதார், 54 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த சீசன் முழுக்க ஆர்சிபிக்காக இன்னிங்ஸ்களை சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் 23 பந்தில் 37 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 207ரன்களை குவித்தது ஆர்சிபி அணி.

208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய லக்னோ அணி  193 ரன்கள் மட்டுமே அடித்து,  14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி 2வது தகுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 27ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் 2வது தகுதிப்போட்டியில் ஆர்சிபி அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.

click me!