ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு அஷ்வின் பதிலடி

By karthikeyan VFirst Published Nov 19, 2022, 7:20 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிகமான ஓய்வெடுப்பதாக முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருந்த நிலையில், அதற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது. டி20 உலக கோப்பை முடிந்த உடனேயே இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்த தொடரில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதனால் விவிஎஸ் லக்‌ஷ்மண் இந்த தொடரில் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! யார் யாருக்கு வாய்ப்பு..?

இதற்கு முன்பாக ஏற்கனவே இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களிலும் லக்‌ஷ்மண் பொறுப்பு பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். அவற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களின்போது மெயின் இந்திய அணி வேறு தொடரில் ஆடியதால் ராகுல் டிராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக சென்றதால், அடுத்த லெவல் அணிக்கு லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார்.

ஆனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ராகுல் டிராவிட் ஓய்வில் இருந்ததால் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்த நிலையில், அதிகமாக ஓய்வு எடுப்பதாக முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருந்தார்.

AUS vs ENG: 2வது ODI-யில் 72 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இதுகுறித்து கருத்து கூறியிருந்த ரவி சாஸ்திரி, பிரேக் எடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது அணியை பற்றியும் எனது வீரர்களை பற்றியும் நன்றாக தெரிந்துகொள்ள அவர்களுடன் அதிகமான நேரம் இருக்கத்தான் விரும்புவேன். இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? உண்மையாகவே எனக்கு தெரியவில்லை. ஐபிஎல் நடக்கும் 2-3 மாதங்கள் ஓய்வில் தானே இருக்கிறீர்கள். அந்த ஓய்வே போதுமானது. மற்ற நேரம் முழுவதும் ஒரு பயிற்சியாளராக அணியுடன் இருக்கவேண்டும். பயிற்சியாளர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் பிரேக் எடுக்காமல் அணியுடன் இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

இந்திய அணி தேர்வாளர்கள் அனைவரும் நீக்கம்..! பிசிசிஐ அதிரடி

அதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்படும் அணி முற்றிலும் வித்தியாசமானது. அவர் பயிற்சியாளராக செயல்படுவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பைக்காக கடுமையாக உழைத்துள்ளார். அதை நான் கடந்த சில மாதங்களாக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு மைதானத்திற்கும், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் பிரத்யேக திட்டங்களை வகுத்து செயல்பட்டிருக்கிறார். எனவே மனரீதியாக மட்டுமல்லாது உடல்ரீதியாகவும் சோர்வடைந்திருப்பார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கின்றனர். எனவே அனைவருக்குமே ஓய்வு தேவை. நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததுமே வங்கதேச சுற்றுப்பயணம் உள்ளது. எனவே தான் லக்‌ஷ்மண் தலைமையில் வேறு பயிற்சியாளர் குழு அணியை வழிநடத்துகிறது என்றார் அஷ்வின்.
 

click me!