#AUSvsIND பெரிய மேட்ச் வின்னர் என்பதால் தான் அவரை ஆடவைத்தோம்..! ஹெட் கோச் சாஸ்திரி தடாலடி

By karthikeyan VFirst Published Jan 20, 2021, 5:36 PM IST
Highlights

ரிஷப் பண்ட் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பதால், வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அவர் அணியில் எடுக்கப்படுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா, பேட்டிங் சரியாக ஆடாததால், 2வது டெஸ்ட்டில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் வாய்ப்பு பெற்றார். விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினாலும் பேட்டிங்கில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினார். சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட்டில் நன்றாக பேட்டிங் ஆடினார்.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்டில், ஆஸி.,யின் கோட்டையான பிரிஸ்பேனில் அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியுடன், தொடரையும் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட். கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 328 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷுப்மன் கில் 91 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். புஜாராவும் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது. 

89 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களையும், மிகப்பெரிய லெஜண்ட் ஸ்பின்னரான நேதன் லயனின் ஸ்பின் பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரிஷப் பண்ட்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த ரிஷப் பண்ட், அதிவேகமாக 1000 டெஸ்ட் ரன்களை(27 இன்னிங்ஸ்) எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 32 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்திருந்த தோனியின் ரெக்கார்டை முறியடித்த ரிஷப் பண்ட், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 13ம் இடத்திற்கு முன்னேறினார். இதுதான், இப்போதைக்கு ஒரு விக்கெட் கீப்பர் பிடித்துள்ள டாப் ஸ்பாட். தென்னாப்பிரிக்க கேப்டனும் விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக், பதினைந்தாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர் என்பதால் தான் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடவைக்கப்படுகிறார். அவரது விக்கெட் கீப்பிங் சரியில்லை என்று பலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் இந்த மாதிரியான போட்டிகளை ஜெயித்து கொடுப்பார். சிட்னி டெஸ்ட்டில்(டிரா ஆன டெஸ்ட்) ரிஷப் பண்ட் இன்னும் கொஞ்ச நேரம் பேட்டிங் ஆடியிருந்தால், அணியை வெற்றி பெற வைத்திருப்பார். அவர் மிகச்சிறந்த வீரர் என்பதால் அவரை அணியில் எடுக்கிறோம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

சிட்னி டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருவேளை அவர் ஆட்டமிழக்காமல், சதமடித்திருந்தால், இந்திய அணியை வெற்றி பெற செய்திருப்பார் என்பது சாஸ்திரியின் கருத்து.

click me!