IPL 2021 பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ்..! பவுலிங்கில் பட்டைய கிளப்பும் டெல்லி கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published Sep 25, 2021, 6:16 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பவர்ப்ளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 

ஐபிஎல் 14வது சீசனில் அபுதாபியில் இன்று நடந்துவரும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான்(8) மற்றும் பிரித்வி ஷா(10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். 

ரிஷப் பண்ட் 24 ரன்களில் முஸ்தாஃபிசுரின் பந்தில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரை ராகுல் டெவாட்டியா வீழ்த்தினார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஷிம்ரான் ஹெட்மயர் 16 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் லலித் யாதவ்(14), அக்ஸர் படேல்(12), அஷ்வின்(6) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது டெல்லி அணி.

இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வாலும் லிவிங்ஸ்டோனும் இறங்கினர். முதல் ஓவரிலேயே லிவிங்ஸ்டோனை வெறும் ஒரு ரன்னுக்கு வெளியேற்றினார் ஆவேஷ் கான். ஜெய்ஸ்வால் 2வது ஓவரின் முதல் பந்தில் நோர்க்யாவின் பவுலிங்கில் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

சீனியர் வீரர் டேவிட் மில்லரும் அஷ்வினின் பந்தில் அவசரப்பட்டு இறங்கிவந்து ஆட முயன்று 7 ரன்னில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடிவருகிறார். சாம்சனுடன் லோம்ரார் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

click me!