#IPL2021 உலகின் நம்பர் 1 டி20 பவுலரை ஒப்பந்தம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 8:49 PM IST
Highlights

உலகின் நம்பர் 1 டி20 பவுலரான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் டப்ரைஸ் ஷாம்ஸியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அதற்காக, முதல் அணியாக அமீரகம் சென்றடைந்த சிஎஸ்கே, அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. மற்ற அணிகளும் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளன.

வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஆடாததால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் அந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் விலகியதால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரும் ஏற்கனவே ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய நிலையில், ஜோஸ் பட்லரும் விலகினார். 

அந்த இழப்புகளை ஈடுகட்ட புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துவருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஜோஸ் பட்லர் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான க்ளென் ஃபிலிப்ஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டையும் ஐபிஎல்லில் இருந்து விலகினார். இதையடுத்து, உலகின் நம்பர் 1 டி20 பவுலரான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் ஷாம்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் அணி. 

தென்னாப்பிரிக்க ஸ்பின்னரான ஷாம்ஸி, இதுவரை 39 டி20 போட்டிகளில் ஆடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசி டி20 பவுலிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ஷாம்ஸி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராஜஸ்தான் அணியின் பவுலிங் யூனிட்டுக்கு கண்டிப்பாக வலுசேர்ப்பார்.
 

click me!