#ENGvsIND இரண்டே பேர் தான் இரட்டை இலக்க ரன்..! 78 ரன்னுக்கு பொட்டளமான இந்திய அணி

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 7:44 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் டக் அவுட்டானார். அதன்பின்னர் புஜாரா ஒரு ரன்னிலும், கோலி 7 ரன்னிலும் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ரோஹித்துடன் இணைந்து நன்றாக ஆடிய ரஹானே, 18 ரன்னில் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பொறுப்பாக விளையாடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரிஷப் பண்ட், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று ஆடி 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோஹித் சர்மா, ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து புல் ஷாட் ஆடமுயன்று 19 ரன்னில் நடையை கட்ட, அதன்பின்னர் ஜடேஜா, ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 78 ரன்னுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியில் ரோஹித்(19) மற்றும் ரஹானே(18) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கம் அல்லது டக் அவுட் என வெளியேறினர்.
 

click me!