
ஐபிஎல் 16வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மொஹாலியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சௌதி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரான் சிங் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அதிரடியாக தொடங்கினார். முதல் 2 ஓவர்களையும் முழுமையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங், 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான தவான் மற்றும் பானுகா ராஜபக்சா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பானுகா ராஜபக்சா 32 பந்தில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தவானும் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் இருவருமே டெத் ஓவர்களில் பேட்டிங் ஆட களத்தில் இல்லை. ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 21 ரன்களும், சாம் கரன் 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 191 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 192 ரன்கள் என்ற சவாலான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.