ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. அதனாலதான் நாங்க ஜெயிச்சோம்.. வின்னிங் கேப்டன் வில்லியம்சன்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 5:22 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் எது என்று வின்னிங் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் எது என்று வின்னிங் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

மான்செஸ்டரில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் அடித்தது. 240 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் அவுட்டாக, ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் இருவருமே தலா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பொறுப்பை தனது தோள்களில் சுமந்தார். தனி நபராக கடுமையாக போராடிய ஜடேஜா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா ஒருமுனையில் அதிரடியாக ஆடிவந்ததால் அவருக்கு சிங்கிள் தட்டி கொடுக்கும் வேலையை மட்டும் தோனி செய்துவந்தார்.

ஏனெனில் ஜடேஜா நன்றாக ஆடிக்கொண்டிருப்பதால் அவரிடம் ஸ்ட்ரைக் கொடுப்பதே சரியாக இருக்கும் என்பதால் அவருக்கு அதிக ஸ்ட்ரைக்குகள் கொடுத்தார். கடைசி நேரத்தில் அடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கெத்தாக நின்றார் தோனி. அதேபோலவே ஜடேஜா 47வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இந்திய அணியின் ஒற்றை நம்பிக்கை தோனி மட்டுமே. 

49வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய தோனி, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடும்போது இரண்டாவது ரன்னை முடிப்பதற்குள் கப்டிலின் டேரக்ட் த்ரோவால் ரன் அவுட்டானார் தோனி. இதுபோன்ற பல போட்டிகளை கடைசி ஓவர் எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கடைசி ஓவர் வரை கொண்டு சென்று தனக்கே உரிய பாணியில் வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறார் தோனி. ஆனால் இந்த போட்டியில் துரதிர்ஷ்டவசமாக, கப்டில் அபாரமான ஃபீல்டிங் மற்றும் த்ரோவால் ரன் அவுட்டானார் தோனி.

இந்நிலையில், இந்த போட்டி குறித்த பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தோனியின் விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்றார். தோனி இதுபோன்ற பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். எனவே அவர் களத்தில் இருந்தது எங்களுக்கு சாதகமான விஷயம் அல்ல. பேட்டிங் ஆடுவதற்கு கடினமான ஆடுகளமாகத்தான் இருந்தது. ஆனாலும் தோனி சிறப்பாக ஆடினார். தோனியை வீழ்த்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் கப்டில் டேரக்ட் த்ரோ அடித்து தோனியை காலி செய்தார். அவரது விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று கேன் வில்லியம்சன் தெரிவித்தார். 
 

click me!