டி20 உலக கோப்பைக்குலாம் அந்த பசங்க சரியா வரமாட்டாங்க.. தல வந்தால் தான் வேலைக்கு ஆகும்..!

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 9:28 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அணியில் தோனி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை. உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம் வலுத்தபோதிலும், தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். 

அவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்து டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது. 

இதற்கிடையே, இந்த ஓராண்டு இடைவெளியில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்ட நிலையில், அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் கேஎல் ராகுல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விக்கெட் கீப்பிங்கில் அசத்தியதையடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக நடந்த தொடர்களில் கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். 

கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் விக்கெட் கீப்பர்களாக இருக்கிறார்கள். சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் இருக்கிறார்.  

தோனியின் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டாலும், அவர் டி20 உலக கோப்பை அணியில் ஆட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், உலக கோப்பை திட்டமிடப்பட்ட தேதியில் தொடங்குவது உறுதியல்ல. ஆனால் ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பும் இதுவரை இல்லை. 

இதற்கிடையே, தோனி குறித்த விவாதம் தொடர்ந்துவரும் நிலையில், அதுகுறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

தோனி குறித்து ஆங்கில ஊடகத்தில் பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி தொடங்குமா என்று தெரியவில்லை. டி20 உலக கோப்பை நடக்கும்பட்சத்தில், உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். மற்றபடி, இருதரப்பு, முத்தரப்பு தொடர்கள் என்றால், அவற்றிற்கு ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருக்கிறார்கள் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக தோனியை எடுப்பேன் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!