அந்த ஒரு விஷயத்துக்காகவே இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தணும்.. முன்னாள் கேப்டன் தடாலடி

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 2:31 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். 

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்த போட்டியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இரு அணிகளுமே வெற்றி தீவிரத்தில் இருக்கும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்த போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு மைக்கேல் வாகன் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவது உலக கோப்பை தொடரை மேலும் விறுவிறுப்பாக்கும். அப்படி இல்லாமல் இந்திய அணியே ஜெயிக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எளிதாக தெரிந்துவிடும். அது உலக கோப்பை தொடரை விறுவிறுப்பு இல்லாமல் மந்தமாக்கிவிடும் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தால் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் அதற்காகவாவது பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்பது மைக்கேல் வாகனின் கருத்து. 

உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா ஆகிய நான்கு அணிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த அணிகளுடன் மற்ற அணிகள் மோதும் போட்டி ஒருதலைபட்சமானதாகவே முடிகிறது. அதனால் விறுவிறுப்பு இல்லாமல் தொடரே மந்தமாக இருக்கிறது. எனவே விறுவிறுப்பை கூட்ட வேண்டுமென்றால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சிறப்பாக ஆடியாக வேண்டும்.
 

click me!