தோனி மாதிரியான ஆளு அவரு.. ஆர்சிபி கேப்டன்சிக்கு தகுதியான வீரர்! இங்கி., வீரரை பரிந்துரைக்கும் மைக்கேல் வான்

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 9:15 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தான் சரியான வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல்லில் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனங்களை சுமந்துவந்த விராட் கோலி, அதையெல்லாம் மீறி, ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தொடர்ந்து ஆடிவந்தார். ஆனால் கடந்த 2 சீசன்களாக அவரது பேட்டிங் ஃபார்மும் மோசமாக உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை, ஐபிஎல்லில் ஒரு முறை கூட டைட்டில் வெல்லவில்லை என்ற விமர்சனங்கள் மற்றும் மொத்தமாக 4 அணிகளுக்கு கேப்டன்சி செய்தது(சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் ஆர்சிபி) ஆகியவை விராட் கோலி மீதான அழுத்தத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்க, அது அவரது பேட்டிங்கை கடுமையாக பாதித்தது.

இதையடுத்து தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ளும் விதமாக டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, இந்த சீசனுடன் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இதையடுத்து ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த விவாதம் நடந்துவருகிறது. அடுத்த கேப்டன்சி குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வான், நான் சொல்லப்போகும் பெயர் பலருக்கு வியப்பளிக்கலாம். ஏனெனில் இந்த வீரரை யாருமே ஆர்சிபி அணியின் கேப்டனாக யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். அதற்கு காரணம், அவர் ஆடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த சீசனில் அவரை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் பட்லர் ஆர்சிபி அணியின் கேப்டன்சிக்கு சரியான வீரர். தோனி மாதிரியான வீரர் பட்லர். எனவே பட்லரை விக்கெட் கீப்பராக எடுத்து, அவரையே கேப்டனாகவும் நியமிக்கலாம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!