ரோகித், ஷிவம் துபே, யஷஸ்வி மற்றும் சூர்யகுமார் யாதவ்விற்கு ரூ.11 கோடி அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!

By Rsiva kumarFirst Published Jul 5, 2024, 6:54 PM IST
Highlights

டி20 உலகக் கோப்பை டிராபி வென்றதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ரூ.11 கோடி வழங்குவதாக மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார்.

பார்படாஸில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நாடு திரும்பியது. டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர். அவரோடு கலந்துரையாடி டிராபியோடு போட்டோஷுட் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து மெரைன் டிரைவ் சென்ற இந்திய அணி வீரர்கள் நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.

அப்போது வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து வான்கடே ஸ்டேடியம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து பேசினர். மேலும், பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு வீரர்கள் ஒன்றாக இணைந்து வந்தே மாதம் பாடல் பாடினர்.

கடைசியாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே என்று ஒவ்வொருவரும் டான்ஸ் ஆடினர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் கலந்து கொள்ளவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மகாராஷிடிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் விநாகர் சிலையும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு சட்டசபைக்கு சென்ற ரோகித் சர்மா முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். மேலும், டி20 உலகக் கோப்பை டிராபி வென்றது குறித்தும் பேசினார். மேலும், அவர் பேசியதைக் கேட்டு சட்டமன்றத்தில் ஒரே சிரிப்பலை தான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டசபைக்கு சென்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் டிராபி வென்றதற்காக ரோகித், சூர்யகுமார், ஷிவம் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ரூ.11 கோடி வழங்குவதாக மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார்.

click me!