மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை மதுரை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கவேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கி 12 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
போட்டி தாமதமாக தொடங்கி தாமதமாக முடிந்ததால், அதே மைதானத்தில் நடப்பதால், மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் தாமதமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மதுரை பாந்தர்ஸ் அணி:
வி ஆதித்யா, அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாலசந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், கே ராஜ்குமார், வருண் சக்கரவர்த்தி, சன்னி சந்து, ஆர் சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஔஷிக் ஸ்ரீநிவாஸ்.
லைகா கோவை கிங்ஸ் அணி:
கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), அஜித் ராம், ஆர் திவாகர், அபிஷேக் தன்வார், பாலு சூர்யா, வல்லிப்பன் யுதீஸ்வரன்.
முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சுரேஷ் குமார் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, மற்றொரு தொடக்க வீரரான ஸ்ரீதர் ராஜுவும், 3ம் வரிசையில் இறங்கிய சாய் சுதர்ஷனும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகினர். ஷிஜித் சந்திரன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அடித்து ஆடிய சுரேஷ் குமார் 22 பந்தில் 46 ரன்களை விளாசினார். அதன்பின்னர் கேப்டன் ஷாருக்கான்(5), அபிஷேக்(11) ஆகியோர் ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும், பொறுப்புடன் பேட்டிங் ஆடிய முகிலேஷ் அரைசதம் அடித்தார். 38 பந்தில் 50 ரன்கள் அடித்து 18வது ஓவரில் முகிலேஷ் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கோவை கிங்ஸ் அணி.
மதுரை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சிலம்பரசன் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 20 ஓவரில் 152ரன்கள் என்ற இலக்கை மதுரை பாந்தர்ஸ் அணி விரட்டிவருகிறது.