
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
லக்னோ அணியில் இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆடுவதால் துஷ்மந்தா சமீரா நீக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், வாஷிங்டன் சுந்தர் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரின் அடுத்த ஓவரில் எவின் லீவிஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
5வது ஓவரை ரொமாரியோ ஷெஃபெர்டு வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த மனீஷ் பாண்டே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கே லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி. இதையடுத்து கேஎல் ராகுலுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். லக்னோ அணியின் ரன் வேகம் அதிகரிக்கவேயில்லை. சன்ரைசர்ஸ் பவுலர்கள் அவ்வளவு எளிதாக ரன்னை விட்டுக்கொடுக்கவில்லை.
பவர்ப்ளேயில் கடந்த காலங்களில் அருமையாக பந்துவீசியுள்ள வாஷிங்டன் சுந்தர், இந்த முறையும் தனது அந்த அடையாளத்தை காப்பாற்றும் விதமாக அருமையாக பந்துவீசி 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். பவர்ப்ளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட லக்னோ அணி திணறிவருகிறது.