IND vs SL:குல்தீப் யாதவ், முகமது சிராஜிடம் சரணடைந்த இலங்கை! 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Jan 12, 2023, 4:48 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 216 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் ஆடுகிறார். கடந்த போட்டியின்போது சாஹலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பதும் நிசாங்கா மற்றும் மதுஷங்காவிற்கு பதிலாக முறையே நுவானிது ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அதிரடியாக விலகிய ஆஸ்திரேலிய அணி..! இதுதான் காரணம்

இலங்கை அணி:

நுவானிது ஃபெர்னாண்டோ, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துனித் வெல்லாலகே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 20 ரன்களுக்கு போல்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். அதன்பின்னர் நுவானிது ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர். குசால் மெண்டிஸ் 34 ரன்களுக்கு குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து நுவாநிது ஃபெர்னாண்டோ 50 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தனஞ்செயா டி சில்வாவை டக் அவுட்டாக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். இலங்கை மிடில் ஆர்டரின் பலமான சாரித் அசலங்கா(15) மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா (2) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 126 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் வனிந்து ஹசரங்கா(21), வெல்லாலகே(32), சாமிகா கருணரத்னே(17), கசுன் ரஜிதா (17) ஆகிய நால்வரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, அந்த அணி 215 ரன்கள் அடித்தது.

ஹசரங்கா மற்றும் சாமிகா கருணரத்னே ஆகிய இருவரையும் உம்ரான் மாலிக் வீழ்த்த, வெல்லாலகேவை சிராஜ் வீழ்த்த 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினார். 

IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்

216 ரன்கள் என்பது மிக எளிதான இலக்கு என்பதால் இந்த இலக்கை எளிதாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிடும்.
 

click me!