#IPL2021 ஐபிஎல் 14வது சீசனை நடத்தி முடிக்க அந்த நாடு தான் சரியான இடம்! ரசிகர்களுடன் நடத்தலாம்; செமயா இருக்கும்

By karthikeyan VFirst Published May 8, 2021, 9:56 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து தான் சரியான நாடாக இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. இதையடுத்து ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். வெளிநாட்டு வீரர்களும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர்.

ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் ஒரு நாட்டில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிக்கும் இந்தியா, அதற்கடுத்த மாதமான அக்டோபரில் டி20 உலக கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதற்கிடையில் ஐபிஎல்லை நடத்தி முடிக்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய 31 போட்டிகளை நடத்த சர்ரே, எம்சிசி, வார்விக்‌ஷைர், லங்காஷைர் ஆகிய இங்கிலாந்து கவுண்டிகள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல்லை நடத்த ஆர்வம் தெரிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்தில் ஐபிஎல்லை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கெவின் பீட்டர்சன், ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பரில் நடத்த வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. என்னை கேட்டால் இங்கிலாந்தில் நடத்தலாம் என்பேன்.

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி. அந்த தொடர் முடிந்ததும் ஐபிஎல்லை அங்கேயே நடத்தலாம். ஏனெனில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள். இங்கிலாந்தின் சிறந்த வீரர்களும் ஆடுவார்கள். அதுமட்டுமல்லாது செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் அருமையாக இருக்கும். மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்காம் மற்றும் லண்டனில் நடத்தலாம். ரசிகர்களையும் போட்டிகளை காண அனுமதிக்கலாம். எனவே ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த மற்ற நாடுகளை விட இங்கிலாந்து தான் சரியான நாடாக இருக்கும் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!