இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக இவரைத்தான் நியமிக்கணும்..! செம பிளேயர்ங்க.. கெவின் பீட்டர்சன் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 22, 2022, 6:22 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவைத்தான் பிசிசிஐ கேப்டனாக நியமிக்கும். ஏனெனில் அவர் தான் கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர். உடனடியாக கேப்டன்சியை ஏற்க தகுதியான வீரர்.

ஆனால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் கேப்டனாக இருக்கக்கூடிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சில முன்னாள் வீரர்கள், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால் ரோஹித் சர்மாவைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கெவின் பீட்டர்சன், எனக்கு ஹிட்மேன் ரோஹித் சர்மாவை ரொம்ப பிடிக்கும். மிகச்சிறந்த பிளேயர் அவர். அவர் பேட்டிங் ஆடுவதை தவறாமல் பார்த்துவிடுவேன்; அந்தளவிற்கு பிடிக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரது கேப்டன்சி மிகப்பெரிய பலம். இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக அவர் தான் நியமிக்கப்படுவார். ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு அவர் அதற்கு தயாராகவில்லை என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!