விஜய் ஹசாரே தொடரில் கேரளாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடக அணி.
விஜய் ஹசாரே தொடரில் இன்று 2 காலிறுதி போட்டிகள் நடந்தன. கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு இடையே டெல்லியில் நடந்த காலிறுதி போட்டியில், டாஸ் வென்ற கேரளா அணி, கர்நாடகாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர்கள் சமர்த் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும், இந்த தொடர் முழுவதும் ஆடியதை போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினர்.
சமர்த் - படிக்கல் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 249 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சமர்த் முதலில் சதமடிக்க, அவரை தொடர்ந்து படிக்கல்லும் சதமடித்தார். சமர்த் சதத்திற்கு பிறகும் மிகச்சிறப்பாக ஆட, படிக்கல் சதமடித்த மாத்திரத்தில் 101 ரன்னில் 43வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அபாரமாக ஆடிய சமர்த் 158 பந்தில் 22 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 192 ரன்களை குவித்து 49வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இரட்டை சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் வெறும் 8 ரன்னில் அதை தவறவிட்டார் சமர்த். கடைசியில் அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 20 பந்தில் 34 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 338 ரன்களை குவித்தது.
இதையடுத்து 339 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கேரளா அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. கேரள அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 2 ரன்னிலும் ரோஹன் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான விஷ்ணு வினோத் 28 ரன்னிலும் கேப்டன் சச்சின் பேபி 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து நின்ற வத்சாய் கோவிந்துடன் இணைந்து சிறப்பாக ஆடினார் முகமது அசாருதீன்.
அசாருதீன் அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 52 ரன்னில் ஆட்டமிழக்க, கோவிந்த் 92 ரன்னில் ஆட்டமிழக்க, 44வது ஓவரில் 258 ரன்களுக்கே சுருண்டது கேரளா அணி.
80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கர்நாடக அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.