
இந்தியா இங்கிலாந்து அணி இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஷபாஸ் நதீம், பும்ரா, இஷாந்த் சர்மா.
இங்கிலாந்து அணி:
ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டோமினிக் பெஸ், ஜாக் லீச், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜிம்மி ஆண்டர்சன்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் களமிறங்கினர். இலங்கையில் ஜாக் க்ராவ்லி மற்றும் சிப்ளி ஜோடி சரியாக ஆடாத நிலையில், இந்தியாவுக்கு எதிராக பர்ன்ஸ் மற்றும் சிப்ளி ஜோடி சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 23 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். இன்னிங்ஸின் 24வது ஓவரில் 33 ரன்களில் ரோரி பர்ன்ஸ், அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய லாரன்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா.
இங்கிலாந்து அணி 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் சிப்ளியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடக்கூடிய ரூட்டும் சிப்ளியும் இணைந்து அஷ்வின், நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 இந்திய ஸ்பின்னர்களின் பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு ஆடினர். முதல் செசனின் இறுதியில் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும், 2வது செசன் முழுவதுமாக ஆடி, 3வது செசனிலும் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.
சிறப்பாக ஆடிய சிப்ளி அரைசதம் அடிக்க, டீ பிரேக்கிற்கு பின்னர் ரூட்டும் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் ஸ்கோரை கடந்துவிட்டனர். ரூட் மற்றும் சிப்ளி ஆகிய இருவரும் களத்தில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிவரும் நிலையில் இந்திய பவுலர்கள் அந்த ஜோடியை பிரிக்க போராடிவருகின்றனர்.